போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள, ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் ஜனவரி 25-க்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுத் தேர்வுகள் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு போராட்டத்துக்கு தடை கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் கோகுல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு, போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு, உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் பின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசுத்தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 25-க்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Exit mobile version