வரலாற்றுச் சிறப்பு மிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பீகாச மாநிலம் கோசி ஆற்றின் குறுக்கே, பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003-2004 நிதியாண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 516 கோடி ரூபாய் மதிப்பில் 1.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்த ரயில் பாலத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதைத் தொடர்ந்து மின் மயமாக்கப்பட்ட 12 ரயில் வழித்தடங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், பீகார் மாநிலத்தில் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள், பீகார் ரயில்வே இணைப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, மேற்கு வங்கம் மற்றும் கிழக்குப் பகுதியின் ரயில்வே இணைப்பையும் வலுப்படுத்தும் என்றார்.

கடந்த 6 ஆண்டுகளில் புதிய இந்தியாவின் நோக்கங்கள் மற்றும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில், ரயில்வே துறையை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்கள் குறித்தும், வேளாண் விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்தும் விவசாயிகளிடம் பொய் பிரசாரம் செய்யப்படுவதாக பிரதமர் குற்றம்சாட்டினார்.

மேலும், விவசாயிகளின் பங்களிப்பை நாடு எப்படி மறந்துவிடும்? என்றும் கேள்வி எழுப்பிய அவர், வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் கோசி மெகா ரயில் பாலம் திறக்கப்பட்டதன் மூலம், பீகார் மாநில மக்களின் 86ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த ரயில் பாலம் இந்தியா-நேபாள எல்லையில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

Exit mobile version