உலக கோப்பையை வெல்லப்போவது யார்?: இங்கிலாந்து – நியூசி. அணிகள் இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 10 அணிகள் மோதின. முதல் அரையிறுதியில் இந்திய அணியுடன் மோதிய நியூசிலாந்து 18 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை முத்தமிட்டுள்ளன. இம்முறை இதுவரை கோப்பையை வெல்லாத இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுவதால், பரபரப்பு பற்றி கிடக்கிறது.

 

Exit mobile version