ஐ.பி.எல் – கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை!

IPL கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

14 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, குவிண்டன் டி காக் களமிறங்கினர். 2 வது ஓவரில் 2 ரன்கள் மட்டும் எடுத்து குயின்டன் டி காக் அவுட் ஆனார். இதையடுத்து, ரோஹித்துடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். சிறப்பாக ஆடிய அவர், 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

கேப்டன் ரோஹித் சர்மா, கம்மின்ஸ் பந்தில் 43 ரன்களில் போல்டானார். அடுத்து களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது.

கடைசி ஓவரில் குர்ணால் பாண்டியா முதல் 2 பந்துகளை பவுண்டரியை நோக்கி தட்டி விட்டதால், மும்பை அணி 150 ரன்களை எட்டியது. ஆனால் அடுத்த பந்தில் வீழ்ந்தார். அடுத்த பந்தில் ஜஸ்பிரீத் பூம்ராவும், கடைசி பந்தில் ராகுல் சஹாரும் ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரசல் 5 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், பிரசித், ஷகிப், வருண் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். சிறப்பான தொடக்கம் தந்த இந்த ஜோடியில், சுப்மன் கில் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 5 ரன்களிலும், கேப்டன் இயான் மோர்கன் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்து, அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். சிறப்பாக விளையாடி அரைசதத்தை பதிவு செய்த நிதிஷ் ராணா, 57 ரன்களில் அவுட் ஆனார்.

ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 9 ரன்களில் வெளியேற, தினேஷ் கார்த்திக்கும் ஆண்ரே ரசல்லும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணையால் கொல்கத்தா எளிதில் வெற்றி பெறும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மும்பை அணியின் துல்லியமான பந்துவீச்சில், ரன் எடுக்க முடியாமல் இருவரும் திணறினர். இதனிடைய ரசல்லின் கேட்சை பும்ரா தவறிவிட்ட போது, கேப்டன் ரோகித் ஷர்மாவின் முகத்தில் அதிருப்தி அப்பட்டமாக வெளிப்பட்டது. இந்நிலையில், ரசல்லின் விக்கெட்டை டிரெண்ட் போல்ட் கைப்பற்ற, அதுவரையில் கொல்கத்தா வசம் இருந்த வெற்றி வாய்ப்பு, மும்பை பக்கம் திரும்பியது. அடுத்து வந்த பேட் கம்மின்ஸையும் டிரெண்ட் போல்ட் டக்அவுட் ஆக்கி வெளியேற்றி, கொல்கத்தா ரசிகர்களின் மூச்சை சற்று நேரம் நிறுத்தினார். களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்பஜன் சிங்கால் பெரிய ஷாட்களை அடிக்க முடியாததால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தோல்வியின் விளிம்பில் நின்ற மும்பை அணி, நேர்த்தியான பந்துவீச்சாலும், கேப்டன்ஷிப்பாலும், போட்டியை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்து முதல் வெற்றியை பதிவு செய்து, அந்த அணியின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Exit mobile version