ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளிய டெஸ்ட் ஆட்ட நாயகன் புஜாரா

ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியில், வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் புஜாரா. அவரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி, வரலாற்று வெற்றி பெற்று, உலக கிரிக்கெட் அரங்கையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முதலாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம், 71 ஆண்டு கால கனவை நனவாக்கியதுடன், 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் ஃபாலோ ஆன் ஆக செய்தது.

இவ்வாறு பல சாதனைகள் படைத்ததில் புஜாராவின் பங்கு தவிர்க்க முடியாதது. குஜராத்தின் ராஜ்கோட்டில் பிறந்த செட்டேஷ்வர் புஜாரா, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் டெஸ்டில் அறிமுகமானர். முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கெதிராக விளையாடிய அவர், கணிசமான ரன்கள் குவித்து கவனத்தை ஈர்த்தார். தற்போதை ஆஸ்திரேலிய சுற்று பயணத்தின் போதும், தனது முத்திரையை பதித்துள்ளார் புஜாரா.

அடிலெய்டில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் யாரும் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றது. முதன் இன்னிங்சிலே 123 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் புஜாரா. அதே டெஸ்டின் 2 வது இன்னிங்ஸிலும் 71 ரன்கள் குவித்து, வியக்க வைத்தார். பின் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில், 103 பந்துகளில் 24 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 4 ரன் மட்டுமே எடுத்தார். இப்போட்டியில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் சம நிலையில் இருந்த இரு அணிகளும் மெல்பர்னில் நடந்த 3 டெஸ்டில் மோதின.

இதில் 319 பந்துகள் நிலைத்து நின்று, 106 ரன்கள் குவித்து மீண்டும் தன்னுடைய பலத்தை நிரூபித்தார் புஜாரா. இந்த போட்டியில், இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மீண்டும் தொடரில் முன்னிலை பெற்ற இந்தியா, கடைசி மற்றும் 4-வது போட்டியில் ஆஸ்திரேயாவுடன் மோதியது. சிட்னியில் நடந்த இப்போட்டியில், 193 ரன்கள் குவித்ததுடன், இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய காரணமானார். இந்த தொடரில் 4 போட்டிகளில் 7 இன்னிங்சில் விளையாடிய புஜாரா, வேறு எந்த வீரரும் 400 ரன்களை எட்டாத பட்சத்தில், 521 ரன்கள் குவித்து, இத்தொடரில் அதிக ரன் எடுத்த வீரரானார்.

இதில் 3 சதங்களும், ஒரு அரை சதமும் அடங்கும். அதேபோல் ஆயிரத்து 203 பந்துகளை எதிர் கொண்டு, ஒரு டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட ராகுல் டிராவிட்டின் சாதனையை, ஆயிரத்து 208 பந்துகளை எதிர்கொண்டதன் மூலம் புஜார முறியடித்துள்ளார். அதோடு, இத்தொடரில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். எதிரணி பவுலர்களுக்கு அபாயகரமான பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள புஜாரா, இனி வரும் காலங்களில் இந்திய டெஸ்ட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Exit mobile version