வேன் மீது இருசக்கர வாகனம் மோதல்: சகோதரர்கள் உயிரிழப்பு

அரியலூர் அருகே வேன்மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், உடல் கருகி அண்ணன் தம்பி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த முஜிபுல்லா துபாயில் பணிபுரிந்து வருகிறார். தஞ்சாவூரில் உள்ள ஒருவர் மூலம் முஜிபுல்லாவிற்கு பொருள் ஒன்றை அனுப்புவதற்காக அவரது மகன்கள் பயாஸ் மற்றும் ஜமீல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே சென்றபோது முன்னால் சென்றுகொண்டிருந்த வேனை முந்தி செல்ல முயற்சித்துள்ளனர்.

அப்போது எதிரே பேருந்து வந்ததால், இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது. இதில் வேனின் அடிப்பாகத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் உடனடியாக தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஜமீல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது, வேனும் தீப்பிடித்து எரிந்ததால், பயாஸ் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், வேனில் பயணம் செய்த 2 பேர் காயமடைந்தனர். 12 பேர் காயமின்றி தப்பித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version