தந்தைக்கு மது வாங்கி கொடுத்து மகனை கடத்தி சென்ற வாலிபர்

கரூர் அருகே, தந்தைக்கு மது வாங்கி கொடுத்து விட்டு, மகனை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் பாலத்துறை ஓ.கே.நகரை சேர்ந்த கட்டட தொழிலாளியின் பெயர் கார்த்திக் வயது 32. கடந்த 5 ஆம் தேதி  மாலை 3.30 மணிக்கு தவிட்டுப் பாளையம் காவிரியாற்றில் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் 2 வயது மகன் மிதுன் ஆகியோர் துணி துவைத்து கொண்டிருந்தனர்.

அருகில் கார்த்திக் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது டூ வீலரில் வந்த, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கார்த்திக்கிடம் அருகில்  மதுக்கடை எங்கே உள்ளது என்று கேட்டுள்ளார்.

அதை கேட்ட கார்த்திக் அதியமான் கோட்டையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்.  அப்படியானால்  நீங்களும் வாருங்கள் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம் எனக்கூறி கார்த்திக்கை, டுவீலரில் வந்த வாலிபர் அழைத்து சென்றார். ஏற்கனவே போதையில் இருந்த கார்த்திக், மதுக்கடைக்கு சென்று மேலும் குடித்ததால், மயக்கமடைந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாலிபர் காவிரியாற்றுக்கு மீண்டும் சென்று குழந்தையை கார்த்திக் அழைத்து வர சொன்னார் என மனைவி விஜயலட்சுமியிடம் கூறி விட்டு மிதுனை அழைத்து சென்றார்.

காவிரியாற்றில் துணிகளை துவைத்து முடித்த விஜயலட்சுமி கணவன், குழந்தையை நீண்ட நேரமாக காணாததால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு, கார்த்திக் மட்டும் இருந்துள்ளார். மிதுனை காணவில்லை. டூ வீலரில் வந்த வாலிபர் கார்த்திக்கு மது வாங்கி கொடுத்து விட்டு மிதுனை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து  வேலாயுதம்பாளையம் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்கும் பணியில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Exit mobile version