சாமியாருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி

காரைக்குடியில் சாமியாருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

காரைக்குடி தந்தை பெரியார் நகர் சாய்பாபா காலனியை சேர்ந்தவர் மணிமுத்து- வயது 52. இவரது மனைவி பூமதி வயது 46. மணிமுத்து கடந்த 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது காரைக்குடிக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த வாரம் மணிமுத்து காரைக்குடி வந்தார். இந்தநிலையில் இரவில் வீட்டின் மொட்டை மாடிக்கு படுக்க சென்றார். காலையில் அவரது மனைவி வந்து பார்த்தபோது மணிமுத்து கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்ததும். காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் மனைவி பூமதி முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதில் காவலர்கள் சந்தேகமடைந்து, அதிரடி விசாரணையில் இறங்கினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் பூமதி ஆட்களை வைத்து தனது கணவரை கொலை செய்தது அம்பலமானது.

இதுகுறித்து மேலும் நடந்த விசாரணையில் பூமதிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த வேல்முருகன் என்ற சாமியாருக்கும் பல வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் திடீரென மணிமுத்து காரைக்குடி வந்துள்ளார். வந்த அவருக்கு மனைவிக்கும் சாமியாருக்கு இடையில் உள்ள தொடர்பு குறித்து தெரியவந்தது.

இந்த தகாத உறவு குறித்து மணிமுத்து மனைவியை கண்டித்து விட்டு மொட்டை மாடிக்கு சென்று படுத்துவிட்டார். மணிமுத்து கண்டித்ததை சாமியாரிடம், பூமதி கூறியதை தொடர்ந்து, இருவரும் சதித்திட்டம் தீட்டினர்.

அதன்படி சாமியார் 4 பேருடன் வந்து மாடியில் படுத்திருந்த மணிமுத்துவை மிரட்டினர். இதில் வாக்குவாதம் முற்றி சாமியார் உள்பட 4 பேரும் சேர்ந்து மணிமுத்துவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடினர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பூமதி உண்மையை இந்த ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து பூமதி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சாமியார் வேல்முருகனும் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற மயான ஊழியரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version