கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், அணைகளின் நீர்வரத்து குறைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் கடும் மழைப்பொழிவு கடந்த சில வாரங்களாக இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த வாரம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து பாதுகாப்பு கருதி, கபினி அணையில் இருந்து 35,000 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 37,000 கன அடியும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகமானதால் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், மழைப்பொழிவு குறைந்ததையடுத்து அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் வெகுவாக குறைந்துள்ளது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு, 4,943 கன அடியாக குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும், 27,000 கனஅடியில் இருந்து, 15,000 கனஅடியாக குறைந்துள்ளது.

Exit mobile version