பணத்தகராறில் கள்ளக்காதலி கொலை ; கள்ளக்காதலன் கைது

மதுரை வாடிப்பட்டி அருகே கொடுத்த பணத்தை திருப்பித் தராத ஆத்திரத்தில் கள்ளகாதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செம்மினி பட்டி பகுதியில் கடந்த வாரம், அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், இறந்த பெண் வாடிப்பட்டி அருகே உள்ள சி. புதூரை சேர்ந்த 31 வயதான தமிழ்செல்வி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், இறந்த தமிழ்செல்வியின் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ்செல்வி தனக்கு வீடு கட்டுவதற்காக மைக் செட் ஆபரேட்டராக பணிபுரியும் லட்சுமணன் என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.

இந்த கொடுக்கல் வாங்கலில் லட்சுமணனுக்கும், தமிழ்செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் உல்லாசமாக ஊரை சுற்றி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் தமிழ்செல்விக்கு கொடுத்த பணத்தை லட்சுமணன் திருப்பி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பணத்தை திருப்பி தர முடியாது என்று தமிழ்செல்வி கூற, ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் லட்சுமணன் தமிழ்செல்வியை காட்டுப்பகுதிக்கு வரவழைத்து, பணத்தை திருப்பி தருமாறு சண்டையிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த லட்சுமணன் தான் கொண்டு வந்த கயிற்றால் தமிழ்செல்வியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி குப்பையில் வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து லட்சுமணனை கைது செய்த வாடிப்பட்டி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version