வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்ற தினகரன் ஆதரவாளர்கள்

திருச்சியில் வாக்குச் சாவடிக்குள் நுழைந்த தினகரன் ஆதரவாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை மிரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி திருச்சி பகவதிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்குபதிவு நடைபெற்று வந்தது. இந்நிலையில் அங்கு வந்த தினகரன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தலைமையிலான கும்பல் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்துள்ளதாக அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். மேலும் அதிகாரிகள் அளித்த விளக்கத்தையும் ஏற்காமல் அவர்களை அவமரியாதையாக பேசினர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குசாவடிக்குள் இருந்த அவர்கள் வாக்குப்பதிவு நடைபெற விடாமல் தடுத்ததால் மற்ற கட்சி பிரமுகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த களேபரத்தினால் இரண்டு அரசு அதிகாரிகள் மயக்கமடைந்தனர். அவர்கள் இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version