திருச்சி நகைக்கடை கொள்ளை: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

திருச்சியில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் தங்கம் மற்றும் வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில், சிசிடிவியில் பதிவான இரண்டு நபர்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து திருச்சியில் உள்ள முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடை ஊழியர்களிடமும் தனித் தனியாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை போன நகைகளின் மதிப்பு 13 கோடி ரூபாய் என்றும் சுமார் 800 வகையான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும் லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணை திருப்தி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version