புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் டிச. 31 வரை நீட்டிப்பு – தமிழக அரசு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை வரும் 31-ம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நவம்பர் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய மின் நுகர்வோர்கள், அபராதமின்றி நவம்பர் 30-ம் தேதிவரை மின் கட்டணம் செலுத்த மின்வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதையடுத்து, டிசம்பர் 5-ம் தேதிவரை மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தஞ்சை மாவட்டத்தின் புதுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்டங்களில் உள்ள நுகர்வோர்கள் வரும் 31-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களில் 4 பிரிவுகளில் உள்ள நுகர்வோர்கள் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள 14 பிரிவுகளில் உள்ள நுகர்வோர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கோட்டங்களிலும் உள்ள நுகர்வோர்கள் வரும் 26-ம் தேதிவரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

Exit mobile version