நிலத்தை கோயிலுக்கு தானமாக எழுதிக்கொடுத்த தந்தையை கொன்ற மகன்

வாழப்பாடி அருகே கோவிலுக்கு பணம் மற்றும் நிலத்தை தானமாகக் கொடுத்த தந்தையை அவரது மகனே கட்டையால் தாக்கி கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன். விவசாயியான இவர், அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு, 1 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததோடு, 25 சென்ட் நிலத்தையும் தானமாக எழுதி கொடுத்துள்ளார். இதனையறிந்த ரங்கனின் மூத்த மகன் ரமேஷ், தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை கட்டையால் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரங்கன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரங்கனின் மனைவி வசந்தா கொடுத்துள்ள புகாரின் பேரில் ரமேஷை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

Exit mobile version