தமிழர்களை காக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க -தம்பிதுரை

தமிழர் உரிமைகளையும், தமிழ் கலாசாரத்தையும் காக்க இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான் என துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியுள்ளார்.

அதிமுகவின் 47-வது ஆண்டு துவக்க விழா கரூரில் நடைபெற்றது. இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய தம்பிதுரை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே உள்ளாட்சி தேர்தல் நடத்த விரும்பியதாகவும், அதனை அப்போது கெடுத்தது தி.மு.க தான் எனக் கூறினார். ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்து மரியாதை செய்தது காங்கிரஸ், தி.மு.க கட்சிகள் தான் என்றும் ராஜபக்சே தொடர்பாக பேச அவர்களுக்கு அருகதை கிடையாது என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழர்களை காங்கிரஸோ, பா.ஜ.கவோ, தி.மு.கவோ காப்பாற்றாது என்றும் தமிழர்களையும் தமிழ் கலாசாரத்தையும் காக்கும் ஒரே இயக்கம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விட்டுச்சென்றிருக்கும் அதிமுக தான் என பெருமைபட தெரிவித்தார்.

முன்னதாக பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை யாராலும் அசைக்கவோ, அழிக்கவோ முடியாது என்றார். தினகரனை நம்பி சென்ற 18 பேரும் தற்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version