பெற்ற மகளை இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கொலை செய்த தந்தை

காவேரிப்பாக்கத்தில், பெற்ற தந்தை தனது மகளை, இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர், தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரைப் பிரிந்து தனது 3 வயது குழந்தை செளமியாவோடு வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும், அவர்  சந்தியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், குழந்தை செளமியா,  உடலில் காயங்களுடன் வாலாஜாப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், குழந்தையின் உடலில் ஏற்கெனவே காயங்கள் இருந்ததால் சங்கர் மற்றும் சந்தியாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சங்கரும், அவரது இரண்டாவது மனைவியும் சேர்ந்து தினமும் குழந்தை செளமியாவை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்ததும், சம்பவத்தன்று குழந்தையை அடித்துக் கொன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் இருவரையும் கைது செய்து வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version