திமுக ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்க மட்டுமே படுகின்றன-அமைச்சர் வேலுமணி

திமுக ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்க மட்டுமே படுவதாக விமர்சித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அறிவித்த திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, ” பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதன் காரணமாக, அதற்கு மாற்றமாக கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த  அரசு கொள்கை முடிவு எடுத்து, அதன்படி செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து பேசிய மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் புகழேந்தி, மதுராந்தகம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்கு 2010ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, அப்படியே கிடப்பில் இருக்கிறது என்றும், அத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி,  திமுக ஆட்சி காலத்தில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோடு சரி;  செயல்படுத்தப் படவில்லை என்றும், திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் முடிக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Exit mobile version