முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இரட்டை குழல் துப்பாக்கி – மதுசூதனன்

இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களின் சதி முறியடிக்கப்பட்டு விட்டது – அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்

இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களின் சதி முறியடிக்கப்பட்டு விட்டதாகவும், முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்பட்டு வருவதாகவும், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

ஸ்மார்ட் கார்டாக உருவாக்கப்பட்ட உறுப்பினர் அட்டைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

இதேபோன்று, அவைத் தலைவர் மதுசூதனனுக்கு ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உறுப்பினர் அட்டையை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய அவைத் தலைவர் மதுசூதனன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்பட்டு வருவதாக கூறினார். இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களின் சதி முறியடிக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version