காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பற்ற துப்பு இல்லை – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டின் முன், மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக 4 பேர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார், சகோதரர் மற்றும் சித்தி என நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த விடியா அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை, கொள்ளை என கொலை மாநிலமாகவும் ,சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும் , போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். இதனை சரிசெய்ய வேண்டிய இடத்தில் உள்ள முதலமைச்சரோ வெற்று விளம்பரத்தில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தி கொண்டிருப்பது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனத்தை கூறியுள்ளார்.
இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும் என்று விடியா திமுக அரசை எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த விடியா அரசை வலியுறுத்துவதோடு, உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version