புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

தேனி அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு மருத்துவமனையில் அலட்சியமாக வழங்கப்பட்ட மாத்திரையால் அவரது கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது. விடியா ஆட்சியில் மக்களின் உயிருக்கு உலைவைக்கும் வகையில் அரசு மருத்துவமனை செயல்படுவது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு….

ஆட்டோவில் படுத்தபடி கிடக்கும் இவர்தான் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கை, கால் செயல் இழந்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளி ராமராஜ்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் தான் கட்டிட தொழிலாளியான ராமராஜ். இவருக்கு ஆதிபராசக்தி என்ற மனைவியும் 14வயதில் சந்தோஷ் என்ற மகனும், 13 வயதில் திவானி என்ற மகளும் உள்ளனர். ராமராஜின் வருமானத்தை நம்பி மட்டுமே அவரது குடும்பம் இயங்கி வந்த நிலையில் தான், கடந்த 2018ல் அந்த சோகம் நேர்ந்தது. அப்போதுதான் ராமராஜுக்கு புற்று நோய் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் தவியாய் தவித்த நிலையிலும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நரம்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து கதிர் வீச்சு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்த நிலையிலும் மூளையில் புற்றுக் கட்டி வளர்ந்தது எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் உறுதியானது.

இதனைத் தொடர்ந்து ஆபரேசனுக்குப் பின்னர் புற்று நோய்க்கான மருந்துகளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாங்கிப் பயன்படுத்தி வந்த நிலையில், ராமராஜின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தானாக நடப்பது, தன்னுடைய வேலைகளை செய்வது என ஆரோக்கியமாக இருந்துள்ளார். இந்த நிலையில்தான், இந்த நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் செப்டம்பர் 11ஆம் தேதி பூதிப்புரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ((T.Telmisartan 1od,T.Svp 1tds,T.Eptoin 2hs
T.Bct 1od,)) கொடுத்த சில மாத்திரைகளை எழுதப் படிக்கத் தெரியாத ராமராஜின் மனைவி வாங்கி வந்து கணவருக்கு கொடுத்துள்ளார். இந்த மருந்துகளை பயன்படுத்த தொடங்கிய முதல் நாளிலேயே மயக்கமடைந்து கீழே விழுந்தவர், தொடர்ந்து பயன்படுத்தியதில் கை, கால்கள் செயல்படாமல் போயுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனைவியில் விசாரித்தபோது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரப்பட்ட பிரஷர் மாத்திரையைப் பயன்படுத்தியதால்தான் இந்த பிரச்சனை வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பூதிப்புரம் அரசு மருத்துவமனையில் சென்று விசாரித்தபோதும் அவர்கள் அலட்சியமாகப் பதில் அளித்ததால், பாதிக்கப்பட்ட ராமராஜுடன் அவரது குடும்பத்தினர், தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாமுக்கு வந்தனர்.

அங்கு மாவட்ட ஆட்சியர் சஜீவனாவிடம் புகார் அளித்த நிலையில் அவர், சுகாதாரத்துறை அலுவலர்களை விசாரிக்குமாறு அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களோ தங்கள் தரப்பில் தவறில்லை என்று கூறி வாக்குவாதம் செய்த நிலையில், ராமராஜின் குடும்பத்தினர், சிகிச்சைக்கான ஆவணங்களை எடுத்துக் காட்டி விளக்கியுள்ளனர். இதனால் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என கூறிவிட்டு கண்டு கொள்ளாமல் சென்றுள்ளனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சஜீவனா, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் தான் பேசி உள்ளதாகவும், உடனடியாக ராமராஜை அங்கு கொண்டு சென்று அனுமதிக்குமாறும் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு செவ்வாய்கிழமை மாலை அனுமதிக்கப்பட்ட ராமராஜுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே அட்சியர் சஜீவனா, பூதிப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் விசாரித்தபோது தங்கள் மீது தவறு இல்லை என்பதைப் போல மறைத்து பேசியதாக மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராமராஜின் சகோதரி மகேஸ்வரியை நியூஸ் ஜெ செய்தியாளர் சந்தித்து பேசியுள்ளார். இதனை கண்ட மருத்துவமனை மருத்துவர்களும், ஊழியர்களும் தொலைக்காட்சிக்கு பேட்டியா கொடுக்கிறீர்கள்? உங்களுக்கு இங்கே சிகிச்சை அளிக்க முடியாது மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என மிரட்டியதாக கூறப்படுகிறது. விடியா அரசின் மருத்துவத்துறையின் அலட்சியத்தால் ஏழைத் தொழிலாளியின் குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதற்கு கண்முன் சாட்சியாக இருக்கிறது ராமராஜின் குடும்பம். இதற்குப் பிறகாவது அவர்களுக்கான உரிய நடவடிக்கைகளை விடியா அரசு எடுக்குமா?

Exit mobile version