சகோதரன் இறப்பிற்கு வஞ்சம் தீர்த்த பாசக்கார அண்ணன்

சென்னையில், தனது தம்பியின் சாவுக்கு காரணமான நபரை, 4 ஆண்டுகளாக திட்டம் தீட்டி, நண்பர்களின் துணையுடன் தீர்த்துக்கட்டி, வஞ்சம் தீர்த்துள்ளார், பாசக்கார அண்ணன் ஒருவர்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகலிங்கம் என்பவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறு தகராறின் போது, நவீன் என்பவரால் தாக்கப்பட்டார்.

முகம் அறியாத நபரிடம் அடி வாங்கியதை அவமானமாக எண்ணிய நாகலிங்கம், விரக்தியில் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

நாகலிங்கத்தின் இறப்பு, அவர் மீது அதிக பாசம் கொண்டிருந்த அவரது அண்ணன் பழனியை வெகுவாக பாதித்தது.

தம்பியின் சாவுக்கு காரணமான நவீனை பழிக்குப்பழி வாங்குவதென சபதமேற்று, அவரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டத் தொடங்கினார் பாசக்கார அண்ணன் பழனி.

இதற்காக, வெங்கடேச புரத்தைச் சேர்ந்த பிரகாஷ், கார்த்திக் ஆகிய இரு லோக்கல் ரவுடிகளின் உதவியை நாடி, அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 23-ம் தேதி, மது போதையில் தூங்கி கொண்டிருந்த நவீனை, திட்டமிட்ட படி, பழனி உள்ளிட்ட 3 பேர் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ்ஹவுஸ் போலீசார், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நவீனை ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், அதிகப்படியான ரத்த இழப்பால், நவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்த காவல்துறையினர், ஆர்.கே நகர் பகுதியில், பழனி உள்ளிட்டோர் பதுங்கியிருப்பதை அறிந்து, அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

நீதிமன்றத்தில் குற்றம் உறுதியான நிலையில், சகோதரன் இறப்பிற்கு பழி தீர்ப்பதாக எண்ணி, தன் வாழ்க்கை முழுவதும் சிறையில் இருந்தே வாடிப்போக இருக்கிறது இந்த பாசமலர்.

Exit mobile version