தெலங்கானாவில் தங்களது கூட்டணி ஆட்சி அமைந்தால் காங்கிரஸ் வேட்பாளரே முதலமைச்சர்- சந்திரபாபு நாயுடு

தெலங்கானாவில் தங்களது கூட்டணி ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் வேட்பாளரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் நாளை ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் நூற்றி 19 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆயிரத்தி 821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து, சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதியை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில், கம்மத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானாவில் தங்களது கூட்டணி ஆட்சியை பிடித்தால், காங்கிரஸ் வேட்பாளரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவை கைப்பற்ற தான் முயலுவதாக சந்திரசேகர் ராவ் கூறுவதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சந்திரசேகர் ராவ் மற்றும் மோடி இருவரும் சர்வாதிகாரிகள் என்று கூறிய அவர், அவர்கள் இருவரும் ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version