கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர், தினேஷ் குண்டு ராவ்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தார். தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும் தினேஷ் குண்டு ராவ் சந்தித்து பேசியிருந்தார். இதனிடையே, தினேஷ் குண்டு ராவுக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அதையடுத்து, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் தினேஷ் குண்டுராவ் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில், தினேஷ் குண்டுராவுடன் தொடர்பில் இருந்த கே.எஸ்.அழகிரி, தன்னை தனிமைப் படுத்தி கொள்ளாமல், சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அப்போது பாதுகாப்பான இடைவெளியும் அவர்கள் காற்றில் பறக்கவிட்டனர். கே.எஸ்.அழகிரியின் இந்த நடவடிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Exit mobile version