9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

39 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், 78 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

755 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும், ஆயிரத்து 577 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மொத்தமாக 14 ஆயிரத்து 662 பதவி இடங்களுக்கு தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

7 ஆயிரத்து 921 வாக்குச் சாவடிகளில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

 

பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்பட 11 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வாக்குச்சாவடி மையங்களில் 13 நோய் தடுப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்கப்பதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் வாக்குச்சாவடி மையமங்களில் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version