வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் சராசரியாக, 78.47 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப் பெட்டிகள் சீலிடப்பட்டு 74 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்த நிலையில், 74 வாக்கு எண்ணும் மையங்களில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஒவ்வொரு கட்டுகளையும் பிரித்து, வாக்குச்சீட்டுகளில் யார்-யாருக்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்பதை பார்த்து வேட்பாளர்கள் வாரியாக பிரித்து எண்ணப்பட்டு வருகிறது.

 

வாக்குச்சீட்டு முறை என்பதால், பல்வேறு இடங்களில் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டது.

இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானிடோரியத்தில், உணவு உள்பட அடிப்படை வசதிகள் இல்லாததால், வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்து, தேர்தல் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்பட்டது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வாக்கு எண்ணும் மையத்தில், தேர்தல் அலுவலர்களுக்கு உணவு வழங்கப்படாததால், பலர் மேஜை மீது சாய்ந்தபடி மயங்கினர்.

இதனால் வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்பட்டது.

 

இதே போல் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில், உணவு வழங்காததால் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்தனர்.

மேலும், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனிடையே 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் உள்ள 789 காலி இடங்களில் நடந்த தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Exit mobile version