எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 7ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து 7 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் கோடியக்கரை கடற்கரையிலிருந்து சுமார் 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட சீனிவாசன், கந்தசாமி, கோபாலகிருஷ்ணன், ஆனந்தபாடி, நிளவரசன், வீரசெல்வன், பிரித்திவிராஜன் ஆகியோரை திருகோணமலை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கபோவதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version