ஆண் நண்பர்களுடன் பேச்சு ; மனைவியை கொன்ற கணவன்

மனைவி மீது சந்தேகமடைந்த கணவன், அவரை கொலை செய்து தானாகவே சென்று காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், லட்சுமி நாராயண நகரில் வசித்து வருபவர் 30 வயதான மணிகண்டன். இவரது மனைவி 27 வயதான சிந்துஜா. இந்த தம்பதிக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. மணிகண்டன் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

மணிகண்டனின் மனைவி சிந்துஜா, சமூகவலைதளங்களிலும், வாட்ஸ்அப்-பிலும் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு, சிந்துஜா ஆண் நண்பர்களுடன் நீண்ட நேரம் போனில் உரையாடுவதும், வாட்ஸ் அப்பில் மெஸேஜ் அனுப்புவதுமாக இருந்ததோடு, போன் செய்தால் எப்பொழுதும் பிசியாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து பல முறை சிந்துஜாவை, மணிகண்டன் கண்டித்துள்ளார். சிந்துஜாவின் பெற்றோர் வீட்டில் மணிகண்டன் தங்கி இருந்ததால், எல்லோர் முன்னிலையிலும் சிந்துஜாவின் நடவடிக்கை குறித்து கேட்க முடியாமல் தவித்துள்ளார். இந்த நிலையில் தான், மனைவியை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார் மணிகண்டன்.

அதன்படி கடந்த 11-ம் தேதி சிந்துஜாவின் பெற்றோர் ஒரு விழாவுக்கு கிளம்பினர். உடனடியாக கத்தி செய்யும் கடைக்கு சென்ற மணிகண்டன், பெரிய கத்தி ஒன்றை வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்துள்ளார். மீண்டும் 12 ஆம் தேதி காலை மனைவி சிந்துஜாவிடம், ஆண் நண்பர்களுடன் எதற்கு போனில் தொடர்ந்து பேசி வருகிறாய் என்று கேட்டு சண்டையிட்டுள்ளார். பின்பு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சிந்துஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில், ரத்த வெள்ளத்தில் படுக்கையிலே சிந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி இறந்த பின்பு, மணிகண்டன் அட்கோ காவல்நிலையத்திற்கு சென்று தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டதாகக் கூறி சரணடைந்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட சிந்துஜாவின் உடலை கைப்பற்றி மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version