மனைவி மீது சந்தேகம், கொலையில் முடிந்த கொடூரம்

மனைவி மீது சந்தேகமடைந்து கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கோவை மாவட்டம், கணபதி அடுத்த காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் 49 வயதான லவேந்திரன்.

இவருடைய மனைவி 32 வயதான கவிதா.

ஏற்கனவே திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக லவேந்திரனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

லவேந்திரன் பழைய கட்டடம் இடிக்கும் பணி செய்து வருகிறார். கவிதா வீட்டின் அருகிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், கவிதா செல்போனில் அடிக்கடி நண்பர்களுடன் பேசி வந்ததால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கவிதா கோபித்துக்கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி, அவரது நண்பர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு வந்த கவிதாவுக்கும், லவேந்திரனுக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் கவிதா மீது கோபத்தில் இருந்த லவேந்திரன், கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக அவரை தாக்கியதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கவிதா உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து லவேந்திரன் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து பக்கத்து வீட்டில் குடியிருந்த கவிதாவின் சித்தப்பா மகன் சௌந்தரராஜன் சத்தம் கேட்டு சென்று பார்த்ததில், கவிதா சடலமாக கிடந்ததை கண்டு சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவிதாவின் சித்தப்பா மகன் சௌந்தரராஜன் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் மனைவியை அடித்துக் கொன்ற லவேந்திரனை தேடி வருகின்றனர்.

 

 

Exit mobile version