நடத்தையில் சந்தேகம்!- மனைவியை கொன்ற 2-வது கணவர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாத்தூர் மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான சங்கீதா. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், கூலி வேலி செய்து தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.

இதனிடையே, சங்கராபுரம் அருகே அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவரை, சங்கீதா 2-வது திருமணம் செய்துள்ளார். கந்தன் ஏற்கனவே திருமணமானவர். கந்தனுக்கும், சங்கீதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிப்போக, சங்கீதா கந்தனை பிரிந்து தனது குழந்தைகளுடன் மாத்தூர் கிராமத்திற்கு சென்று தனியாக குடியேறினார்.

இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி மதியம், வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவர், நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால், சங்கீதாவின் குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். இதனிடையே, பால்ராம்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து மண்மலை செல்லும் சாலையில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த உடலை கைபற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அது சங்கீதா தான் என்பது தெரியவந்தது. அதே சமயம், சங்கீதா இறந்த உடன் அவரது கணவர் கந்தன் மாயமாகியுள்ளார்.

இதனால், இந்த கொலையை கந்தன் தான் செய்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில், கந்தனை கண்டுபிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், சங்கீதா மாத்தூரில் உள்ள மண்மலை பகுதியை சேர்ந்த 40 வயது ஆண் நபருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால், அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தீட்டம்போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கந்தன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

Exit mobile version