அடுத்தடுத்து 4 கொலைகளால் நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டத்தில் கடந்து 3 தினங்களில் அடுத்தடுத்து 4 கொலைகள் அரங்கேறியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாளையங்கோட்டை சங்கர் காலனியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் மிலிட்டரி லைன் சர்ச் அருகே நேற்றிரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சாத்தான்குளம் கொலை வழக்கு ஒன்றில், அப்துல் காதருக்கு தொடர்பு இருப்பதால், முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில், தங்கபாண்டி என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களில் அடுத்தடுத்து 4 கொலை சம்பவங்கள் அரங்கேறியிருப்பது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

இதனிடையே, திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சின்ராசு என்பவர், நேற்று இரவு பொன்மலைப்பட்டி கடை வீதியில் சென்று கொண்டிருந்த போது, பொன்மலையைச் சேர்ந்த அலெக்ஸ் உள்ளிட்டோர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Exit mobile version