தமிழக பட்ஜெட் சட்டசபையில் நாளை தாக்கல்

தமிழக பட்ஜெட் சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டினை தாக்கல் செய்யவுள்ளார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 2-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் ஜனவரி 8-ம் தேதி சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.

இந்த நிலையில், 2019- 2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. நிதித்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

துணை முதலமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்து முடித்ததும் அன்றைய சட்டசபை நிகழ்வுகள் நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து, சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது.

Exit mobile version