பெண்களை கேலி செய்த ரோமியா ! தட்டி கேட்டவர் வெட்டிப் படுகொலை…!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்டவரை அரிவாளால் வெட்டி கொன்ற 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ். 21 வயதாகும் இவர் அடிக்கடி அப்பகுதியை சேர்ந்த பெண்களை கேலி கிண்டல் செய்து வந்துள்ளார்.

இதனை அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது.  பல முறை கண்டித்தும் லாரண்ஸ் தனது லாவணி கச்சேரியை நிறுத்திய பாடில்லை.

இதையடுத்து முருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் லாரன்ஸ் குறித்து புகார் அளித்துள்ளார். மேலும் அவர் பல பெண்களை ஏமாற்றி நாசம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முருகன் அளித்த புகாரின் பேரில் லாரண்ஸை கைது செய்வதற்கு பதிலாக அவரை அலர்ட் செய்துள்ளனர் அப்பகுதி காவல்துறையினர்.

தன்னை எதிர்த்து ஒருவர் காவல் நிலைய படியேறிய விஷயம் அறிந்து ஆத்திரமடைந்த லாரன்ஸ், வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்த முருகனை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகனை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முருகனின் உடலை மீட்டு உடற் கூராய்விற்கு அனுப்பி வைத்து லாரண்ஸை கைது செய்தனர்.

பெண்களைக் கேலி செய்ததை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் முருகன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பாட்டக்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version