புதிய கட்சியில் இணைந்தார் ராஜபக்சே – இலங்கை அரசியலில் உச்சக்கட்ட குழப்பம்

தன்னை பிரதமராக்கிய சிறிசேனாவைவிட்டு விலகி, புதிய கட்சியில் ராஜபக்சே சேர்ந்திருப்பதால், இலங்கை அரசியல் குழப்பத்தின் உச்சிக்கே சென்று விட்டது.

குழப்பத்தின் மறுபெயராக மாறிவிட்ட இலங்கை அரசியலில், நாளொரு வண்ணமாக திருப்பங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்ல நடந்த முயற்சியிலிருந்துதான் இது தொடங்கியது. அதற்கு ரணில் விக்ரமசிங்கே கட்சியின் மூத்த நிர்வாகிகள் தான் காரணம் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார் சிறிசேனா. முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து, அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, ரணில் விக்ரமசிங்கேயின் உதவியுடன், கடந்த 2015-ம் ஆண்டு அதிபராக அவர் பதவி ஏற்றார்.

அதிபர் சிறிசேனாவும், ரணில் விக்ரமசிங்கேவும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்துவந்தனர். கொலை முயற்சியைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக ரணில் விக்ரமசிங்கேவின் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த மாதம் 26-ம் தேதி வாபஸ் பெற்ற சிறிசேனா, ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதாகவும் அறிவித்தார். அதன்பின், ராஜபக்சேயுடன் கூட்டணி அமைத்த அவர், புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்து, பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.

பெரும்பான்மை இல்லாத ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்று விக்ரமசிங்கே எதிர்ப்புத் தெரிவித்தார். மறுபுறம், சபாநாயகர் ஜெயசூர்யாவும், ராஜபக்சே சட்டப்பூர்வ பிரதமர் இல்லை என்று அறிவித்தார். இதையடுத்து புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டதால், இலங்கையில், இரண்டு பிரதமர்கள் மற்றும் இரண்டு சபாநாயகர்கள் என்ற பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டது.

சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் அதிபர் சிறிசேனா முடிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்ட அதிபர் சிறிசேனா, நவம்பர் 14-ம் தேதி கூடும் என்று அறிவித்தார். ஆனால், திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்து, 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.

இந்நிலையில்தான், திடீரென்று சிறிசேனாவிடமிருந்து வெளியேறி, இலங்கை மக்கள் கட்சியில் இணைந்தார் ராஜபக்சே. அவருடன் முன்னாள் எம்.பி க்கள் 50 பேரும் கட்சி மாறியுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி சார்பில் தேர்தலில் நின்று வென்றவர்கள். இதனால், அதிபராக இருக்கும் சிறிசேனாவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பங்களுக்கான விடை, அடுத்த வருடம் ஜனவரி மாதம் தெரிந்துவிடும்.

 

Exit mobile version