பொய் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து காவல் நிலையம் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை எதிர்த்து போராடிய பெண்களுக்கு ஆதரவாக புகார் அளித்தவர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளதாக கிராம பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒட்டன்சத்திரத்தை அடுத்த காவேரியம்மாபட்டி ஊராட்சி ராயக்கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்துள்ளார்.

அதனால் பல இடையூறுகளைச் சந்தித்த அந்த பகுதி பெண்கள், கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதற்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த மணிமுத்து என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், மணிமுத்து தன்னைத் தாக்கியதாக, சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட முத்துச்சாமி அளித்த புகாரை மட்டும் எடுத்துக்கொண்டு, காவல்துறையினர் அவரைக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து கிராம பெண்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களை காவல் ஆய்வாளர் விரட்டியடித்ததும் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version