உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் தீ விபத்து: 7 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்

உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த வேலூர்மதுரா காமராஜ் நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நள்ளிரவில் அங்குள்ள குடிசை ஒன்றில் திடீரென தீ பிடித்து எரிந்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகே இருந்த குடிசை வீடுகளுக்கும் பரவியது. அப்போது, வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்தனர். கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் வேலூர் மதுரா காமராஜ் நகரில் பரபரப்பான சூழல் உருவானது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர், விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் செல்வராசு, அய்யப்பன், அஞ்சாபுலி, ஜெயக்கொடி, சரவணன், ஆறுமுகம், சின்னராசு ஆகியோரின் வீடுகள் உட்பட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.

சம்பவ இடத்திற்கு சென்ற உளுந்தூர்பேட்டை தாசில்தார் வேல்முருகன், தீ விபத்து குறித்து விசாரித்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். 

Exit mobile version