கோவையில் கொலை குற்றவாளி உறவினரை சரமாரியாக தாக்கிய உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள்!!

கோவையில், காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை பார்ப்பதற்காக காவல்நிலையத்திற்கு வந்த உறவினரை, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர். பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்த மாணவி, தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். அந்த மாணவி காதலிக்க மறுத்ததால், அதே பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ் என்ற இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பேரூர் காவல் துறையினர், தப்பியோடிய இளைஞரை கோவைபுதூர் வனப்பகுதியில் கைது செய்தனர். பேரூர் காவல் நிலையத்தில் உள்ள ரித்தீஷை பார்ப்பதற்காக உறவினர் ஒருவர் பேரூர் காவல்நிலையம் வந்தபோது, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அவர்களை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு நிலவியது. இதனிடையே, இளம்பெண்ணை கொலை செய்த ரித்தீஷை தூக்கிலிடவேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பலத்த போராட்டத்திற்கு பின்னர், ரித்தீஷை அழைத்துச் சென்ற போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version