பிரதமர் ஆன பிறகு அலுவலக பணிகளை கவனிக்க தொடங்கினார் ராஜபக்சே

இலங்கையில் 22-வது பிரதமராக பொறுப்பேற்ற ராஜபக்சே, தனது அலுவலக பணிகளை கவனிக்க தொடங்கினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேனா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக அறிவித்து, கடந்த வெள்ளிக்கிழமை அவரை பதவியேற்கச் செய்தார்.

அதிபர் சிறிசேனாவின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே, பிரதமராக தான் நீடிப்பதாக அதிபருக்கு கடிதம் எழுதினார். ராஜபக்சே பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தை வரும் 16-ம் தேதி வரை முடக்கி வைப்பதாக அதிபர் சிறிசேனா அதிரடியாக அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சீனாவின் பின்னணில் இலங்கை அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பிரதமர் அலுவலகத்தில் தனது அலுவலக பணிகளை ராஜபக்சே கவனிக்க தொடங்கியுள்ளார்.

இதனிடையே ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. உச்சகட்ட குழப்பம் நிலவுவதால், தலைநகர் கொழும்புவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version