தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு – இலங்கை அரசு உத்தரவு!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 40 பேரை விடுவித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 54 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மீனவர்களின் 4 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக மீனவர்கள் 40 பேர் மற்றும் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. நல்லிணக்க அடிப்படையில் மீனவர்கள் விடுவிக்கப்படுவதாகவும், நாளை இந்திய கடலோர பாதுகாப்பு படையினரிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் நாளை தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version