மோடி அரசின் நடவடிக்கைகள் அழிவுக்கு வழி வகுக்கும் – ராகுல் காந்தி எச்சரிக்கை

எச்ஏஎல் போன்ற தேசிய சொத்துக்களை புறக்கணிப்பது, நவீன இந்தியாவின் அழிவுக்கு வழி வகுக்கும் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் நிறுவனத்தின் இன்னாள் மற்றும் முன்னாள் ஊழியர்களை அவர் இன்று சந்தித்து பேசினார்.

ஊழியர்களின் ஆதங்கத்தை கேட்க வந்திருப்பதாக கூறிய ராகுல், நாடு சுதந்திரம் பெற்ற போது குறிப்பிட்ட துறைகளில் சாதனை படைக்க சில முக்கிய சொத்துகள் உருவாக்கப்பட்டதை சுட்டிக் காட்டினார். உயர்கல்விக்கு ஐஐடி முக்கிய சொத்தாக உள்ளது போன்று, தேசத்தை வான்வெளிக்கு எடுத்து செல்வதில், எச்ஏஎல் முக்கிய பங்கு வகித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் துறையில் அமெரிக்காவிற்கு இந்தியாவும், சீனாவும் தான் சவாலாக இருக்கும் என்று பராக் ஒபாமா கூறியதை நினைவு கூர்ந்த ராகுல், ரபேல் விவகாரத்தில் எச்ஏஎல் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மோடி அரசின் இதுபோன்ற நடவடிக்கை நாட்டின் அழிவுக்கு வழி வகுக்கும் என்று ராகுல் காந்தி எச்சரித்தார்.

Exit mobile version