இராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை..!

பிரதமர் மோடியின் குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடியின் குடும்பப்பெயர் குறித்து ராகுல்காந்தி அவதூறாக பேசியது வைரலானது. இதற்கு எதிராக குஜராத் முன்னாள் அமைச்சர் பூர்ணேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், 2019ம் ஆண்டு கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், ராகுல்காந்தி பேசியபோது, “எல்லா திருடர்களும் மோடியின் குடும்பப் பெயரை ஏன் பகிர்ந்து கொள்கிறார்கள்” என்று கூறி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி எச்.எச்.வர்மா பரபரப்பு தீர்ப்பளித்தார். இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய ஏதுவாக ஜாமீனும் வழங்கப்பட்டது.

Exit mobile version