ஆசியா பீபிக்கு எதிராக போராடுபவர்களுக்கு பாக். பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை

மத அவமதிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட ஆசியா பீபிக்கு எதிராக போராடுபவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆசியா பீபி என்பவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் போது மத நம்பிக்கைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டார். இதில் அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை கடந்த 2014-ம் ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட நகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுக்கு எதிரான நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் இது தொடர்பாக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Exit mobile version