விமானி அபிநந்தன் விவகாரம்: எதையும் கண்டுக்காமல் 50-வது நாளை கொண்டாடிய 'பேட்ட' படக்குழு

விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்புவாரா என்ற ஏக்கத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒருபுறம் எதிர்நோக்கியிருந்த தருணத்தில், மறுபுறம், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கலாநிதிமாறன் உள்ளிட்ட பேட்ட படக்குழுவினர், படத்தின் 50-வது நாள் வெற்றி தினத்தை கேக் வெட்டி கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில், கார்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. இந்த படம் 50 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர், கேக் வெட்டி சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.

கொண்டாட்டத்தின் உச்சகட்டமாக சென்னை ஆல்பர்ட் திரையரங்கம் அருகே, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜையும், இசையமைப்பாளர் அனிருத்தையும், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட வீரர் அபி நந்தன் எப்போது நாடு திரும்புவார் என்று, நாட்டு மக்கள் அனைவரும் ஏக்கத்தோடு காத்திருந்த நேரத்தில், அரசியலில் இறங்கபோகிறேன், நாட்டு மக்களுக்காக பாடுபடப்போகிறேன் என்று கூறிக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த், சன்பிக்சர்ஸ் நிறுவனத்தோடு இணைந்து பேட்ட 50-வது நாள் விழாவை கொண்டாடியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படக்குழுவின் இந்த கொண்டாட்டத்தால், அபி நந்தன் மீது அக்கரை இல்லையா என கேள்விகள் எழும் என்ற அச்சத்தில், ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், அபிநந்தன் விரைவில் நாடு திரும்ப இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார் என சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Exit mobile version