ஒகேனக்கல்லில் 14 நாட்களுக்கு பின் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல்லில் உபரிநீர் நீர்வரத்து 4 ஆயிரத்து 500 கன அடியாக குறைந்ததால் 14 நாட்களுக்கு பின் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி அனுமதி வழங்கியுள்ளார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவ மழையின் தீவிரம் குறைந்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு சுமார் 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வரும் நீர்வரத்து 4 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக 23 ஆம் தேதி முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. தற்போது நீரின் வரத்து குறைந்து விட்டதால், 14 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 171 கன அடியாக குறைந்துள்ளது. தற்போது நீர்மட்டம் 52.97 அடியாக உள்ள நிலையில், 19.73 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version