காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

கர்நாடக அணைகளில் இருந்து 90 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து ஒகேனக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் இயக்கவும், அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது ஒகேனக்கலில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மலர்விழி வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது பென்னாகரம் வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் காவிரி கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Exit mobile version