16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 9 பேர் கைது

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் உள்பட 9 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா. இவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில், சிறுமியை கடத்தி சென்ற அமானுல்லா, தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடந்த 4ம் தேதி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அமானுல்லாவிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அமானுல்லா மற்றும் அவரின் நண்பர்கள் 9 பேரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மேலும், ஒருவரை தேடி வருகின்றனர். கைதானவர்கள் பொள்ளாச்சி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version