கணவனே கொலைகாரன் : தாம்பத்யத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் புதுப்பெண் கொலை

தாம்பத்யத்திற்கு மறுத்த புதுப்பெண்ணை, ஆற்று நீரில் மூழ்கி கொலை செய்த கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள். ஆனால் 50 நாள் கடந்தும் மோகம் தீராத கணவனின் வெறிச்செயலால் புதுமணப்பெண், பலியான சம்பவம் திருச்சியை பதறச் செய்துள்ளது. திருச்சி, சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் அடுத்த வாழவந்திபுரம் பகுதியில் வசிப்பவர் 28 வயதான அருள்ராஜ். இவருக்கும் கிறிஸ்டி ஹெலன்ராணி என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. பல கனவுகளோடு திருமண பந்ததிற்குள் அடியெடுத்து வைத்தர்களுக்கு இடையே ஆரம்பம் முதலே சரியான புரிதல் இல்லை என்று கூறப்படுகிறது. புதுமணத் தம்பதிகளுக்குள் தாம்பத்யம் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 30-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் இயற்கை உபாதைக்காக கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு கிறிஸ்டி சென்றதாக தெரிகிறது. மனைவி நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை என்று கூறி வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு தேடுவது போல் நடித்துள்ளார் கணவர் அருள்ராஜ். அப்போது ஆற்றின் கரையோரம் நிர்வாண நிலையில் சடலமாக காணப்பட்டார் கிறிஸ்டி. மேலும் அவர் அணிந்திருந்த நகைகளும் மாயமாகி இருந்தன. மற்றவர்களோடு சேர்ந்து கதறி அழுதுள்ளார் அருள்ராஜ். இதுபற்றிய புகாரின்பேரில் விசாரணையை துவங்கினர் கொள்ளிடம் போலீசார். கிறிஸ்டியின் கணவரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். ”கயவன் காட்டில் இல்லை, வீட்டில் தான் இருக்கிறான்” என்ற சொல்லுக்கு ஏற்ப, தன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் அருள்ராஜ். சம்பவத்தன்று அதிகாலை மனைவியுடன் தாம்பத்யத்தில் ஈடுபட, கொள்ளிடம் ஆற்றிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு மனைவியின் அனைத்து ஆடைகளையும் நீக்கியபின் தாம்பத்யத்திற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்து, ஆற்று நீரில் மூழ்கி கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். சடலத்தை ஆற்றில் வீசும் முன் கிறிஸ்டி அணிந்திருந்த நகைகளை கழற்றி விட்டு வீசியதாகவும் வாக்குமூலம் அளித்தார். கட்டிய மனைவியையே பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த கணவனின் வெறிச்செயல் திருச்சி கொள்ளிடத்தை கொல்லிடமாக மாற்றி உள்ளது.

Exit mobile version