AR. ரகுமான்னா எவுரு? லூஸ் டாக் விட்ட பாலகிருஷ்ணா… வச்சு செய்யும் நெட்டிசன்கள்

ஏ.ஆர் ரகுமானை யாரென்றே தெரியாது என கூறி இணையவாசிகளின் வாய்க்கு அவலாகி இருக்கிறார் நடிகர் பாலகிருஷ்ணா. திரையில் ஒரு கிராமத்தையே பந்தாடும் பாலகிருஷ்ணா, தற்போது நெட்டிசன்களால் பந்தாடப்பட காரணம் என்ன..? பார்க்கலாம்.

மசாலா தேசமான ஆந்திராவில், மாசாலா குடோனாகவே வலம் வரும் உன்னத நடிகர் பாலைய்யா என்ற பாலகிருஷ்ணா. 61 வயதாகும் இவர் திரையிலும் சரி… நிஜத்திலும் சரி… அதிரடி ஆட்டக்காரர் தான்.

விரல் அசைவில் ரயிலையே பின்னோக்கி திரும்பி போக செய்வது, புல்லட்டால் டைம் ஃபார்மை செயலிழக்க செய்வது போன்ற சூப்பர் மேனுக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் வித்தைகள் எல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்.

சீனுக்கு சீன் சிரிப்பு வரும்படி இருந்தாலும், அவர் படங்களுக்கென தனி மார்க்கெட் தெலுங்கு சினிமாவில் உண்டு. சொல்லப்போனால் அவரின் கோமாளி தனங்களுக்கு கிடைத்த கிரேஸை பார்த்து விஜயகாந்தே நரசிம்மா போன்ற படங்களில் அவர் பாணியை முயற்சித்து பார்த்தார்.

வராத டான்ஸையும், நடிப்பையும் வா..வா.. என கூறி, இன்றும் பாலகிருஷ்ணா படத்தில் நடித்து கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டி அவருக்கு பேக் ஃபயராகி இருக்கிறது.

தொகுப்பாளினி ஏஆர். ரகுமான் குறித்த கேள்விக்கு, ஏ.ஆர். ரகுமான்னா எவரு என கேட்டு இணைய வாசிகளின் வாய்க்கு அவலாகி இருக்கிறார். ”ஆஸ்கர் அவார்டு வாங்கி இருக்கலாம். ஆனால் அவர் யாரென்னே தெரியாது” என்றும், ”பாரத ரத்னா விருதெல்லாம் என்.டி ராமாராவின் கால் தூசுக்கு சமம்” என்றும் சர்ச்சைக்கு ஆரத்தி எடுத்து ஏழரையை கூட்டியுள்ளார்.

பாலாகிருஷ்ணா தன்னுடைய உலக தரமான படம் ஒன்றுக்கு இசைமைக்குமாறு ஏஆர். ரகுமானை அணுக, அவர் மனதில் என்னென்ன ஓடியதோ, அதில் இருந்து நழுவியுள்ளார். அதுதான் பாலகிருஷ்ணாவின் இந்த கொலை வெறிக்கு காரணம். ஆனால் பாலகிருஷ்ணாவின் படங்களை பார்த்தவர்களுக்கு புரியும் ஏ.ஆர். ரகுமான் இசையை எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார் என்பது…

Exit mobile version