கேரள பெண் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்: கொலை செய்ததாக கணவர், முன்னாள் காதலி கைது

நெல்லை அருகே, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வழக்கில் திடீர் திருப்பமாக, அப்பெண்ணின் கணவரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில், கடந்த செப்டம்பர் மாதம் 22ந் தேதி, ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, வள்ளியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், திடீர் திருப்பமாக அப்பெண்ணின் கணவர் பிரேம்குமாரை, கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், முன்னாள் காதலியுடன் பழகுவதை தன் மனைவி வித்யா எதிர்த்ததால், காதலியுடன் இணைந்து வித்யாவை கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும், பின் உடலை காரில் வைத்து, வள்ளியூர் அருகில் உள்ள ஏர்வாடி காட்டு பகுதியில் வீசிச் சென்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

இதனைடுத்து, பிரேம்குமார் மற்றும் அவரது காதலியான சுனிதா பேபி ஆகியோரை, கேரளா உதயபேருர் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் வள்ளியூர் வந்து, வித்யாவின் உடலை, கேரள மருத்துவ குழுவைக் கொண்டு மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, குற்றவாளிகளை சம்பவ இடமான வள்ளியூருக்கு அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version