டிக் டாக் செய்து வந்த மனைவியை கொலை செய்த கணவர்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள தல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாச்சூ. டெய்லரான இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் பள்ளி செல்லும் வயதில் மகன், மகள் இருவர் உள்ளனர்.

பாத்திமாவுக்கு டிக் டாக்கில் வீடியோ வெளியிடும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் பல நேரங்களில் வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளி, தோட்டம் என இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு சென்று பாடல்களுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.

எத்தனையோ முறை பாச்சூ கண்டித்தும் பாத்திமா கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பாத்திமா மீது அவரது கணவருக்கு சந்தேகம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள அறையில் பாத்திமா தூக்கில் தொங்குகிறார் என்று கணவன் பாச்சூ சத்தம் போட்டுள்ளார். இதை கேட்ட பக்கத்து வீட்டார், உறவினர்கள் ஆகியோர் விரைந்து சென்று பாத்திமாவின் உடலை இறக்கி காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு பாச்சூ பாத்திமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக பாச்சூவை கைது செய்த காவல்துறையினர், பாத்திமா உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக டிக் டாக்கில் ஆடல், பாடல், வசனம் என்று வீடியோ வெளியிடும் விவகாரத்தில் பல்வேறு குடும்பங்களுக்கிடையே விரிசல் ஏற்படுவதும், கொலை குற்றங்கள் நடப்பது அதிகமாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version