பரமக்குடி நெசவாளர் வடிவமைத்துள்ள 3டி சேலையில் மோடி-ஜின்பிங் உருவம்

பரமக்குடியை சேர்ந்த நெசவாளர் ஒருவர், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்தித்த புகைப்படத்தினை, 3டி சேலையாக வடிவமைத்துள்ளார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12-ல் பிரதமர் மோடி-ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. மாமல்லபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த புகைப்படம் தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த சந்திப்பை நினைவு கூறும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் சார்பில் சீனிவாசன் என்ற நெசவாளர் ஒருவர் சந்திப்பு புகைப்படத்தை நூல் சேலையில் நெசவு செய்து சாதனை படைத்துள்ளார்.

நெசவாளர்கள் பெரும்பாலும் பட்டு சேலையில் தான் புகைப்படத்துடன் கூடிய சேலைகளை தயாரிக்கின்றனர். ஒரு மாற்றத்திற்க்காக, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு புகைப்படம் வைத்து நூல் சேலை தயாரித்துள்ளார் பரமக்குடியை சேர்ந்த நெசவாளர் ஒருவர்.

மேலும் இந்த சேலையை நேராக பார்த்தால் இருநாட்டு தலைவர்கள் மட்டும் தெரியும் வகையிலும், சேலையின் பக்கவாட்டு பகுதியில் இருந்து, பார்த்தால் மாமல்லபுரம் சிற்பங்கள் தெரியும் வகையிலும் 3டி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு படம் பொருத்திய சேலைக்கு மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றுவருகிறது. பொதுமக்கள் பலரும் இந்த நூல் சேலை கேட்டு ஆர்டர் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் முதன்முதலாக பரமக்குடியில் தான் புகைப்படத்துடன் கூடிய நூல் சேலை வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version